சென்னையில் இருந்து வேலை தேடி மலேசியாவுக்கு வரும் ‘போல்ட் கண்ணன்’ என்கிற விஜய் சேதுபதி, அங்கு ‘கெட்ட’ போலீசுமான பப்லு பிருத்விராஜின் கட்டுப்பாட்டில் இருக்கும் தனது காதலி ருக்மணி வசந்தை மீட்க, வங்கியில் 40 கோடி கொள்ளையடிக்கிறார். அவரது உதவியை ருக்மணி வசந்த் ஏற்க மறுக்கிறார்.
இதற்கிடையே மலேசியா போலீசாரிடம் சிக்கிய அவரும், அவரது நண்பர் யோகி பாபுவும் என்ன ஆனார்கள் என்பது மீதி கதை. ஆறமுக குமார் இயக்கியுள்ளார். போல்ட் கண்ணன் என்கிற கேரக்டரில் வரும் விஜய் சேதுபதி சிறப்பாக நடித்துள்ளார். அவருக்கும், ருக்மணி வசந்துக்குமான காதல் காட்சிகள் கவிதை போல் இருக்கிறது. ஜாலியாக கதை நகர்வதால், அதற்கேற்ப ஒன்லைன் காமெடி மூலம் யோகி பாபு மீண்டும் தனது இடத்தை தக்கவைத்துள்ளார். வங்கியை கொள்ளையடித்து விட்டு பைக்கில் பறக்கும் விஜய் சேதுபதியை தப்பிக்க வைக்கும் யோகி பாபு, பெண் வேடத்தில் தோன்றி கலக்கியுள்ளார். அவர்களை மிரட்டும் வில்லன் பி.எஸ்.அவினாஷ், தனி ரகம்.
தவிர, முக்கிய வேடங்களில் திவ்யா பிள்ளை, பப்லு பிருத்விராஜ், முத்துக்குமார், ராஜ்குமார் ஆகியோர் கதையின் நகர்வுக்கு பெரிதும் உதவியுள்ளனர். மலேசியாவின் அழகான மற்றும் சந்துபொந்தை கண்முன் காட்டி அசத்தியுள்ளார், ஒளிப்பதிவாளர் கிரண் பகதூர் ராவத். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். சாம் சி.எஸ் பின்னணி இசை, படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்க பேருதவி செய்துள்ளது. பென்னி ஆலிவர் எடிட்டிங் நறுக். லாஜிக் பார்க்கவில்லை என்றால், காதலிக்கான இந்த கொள்ளையை ரசிக்கலாம்.