திருப்பூர் குருவி: விமர் சனம்

கிராமத்தை சேர்ந்த 4 பெண்கள், திருப்பூரில் நவீன ஆடைகள் தைக்கும் ஒரு நிறுவனத்துக்கு வேலைக்கு செல்கின்றனர். அவர்கள் சாப்பிடவும், தங்கவும், சுதந்திரமாக இருக்கவும் நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. அதுபோல், பக்கத்து கிராமத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் அங்கு வேலைக்கு வருகின்றனர். 4 பெண்களுக்கும் அவர்கள் பள்ளிப் பருவத்திலேயே அறிமுகம் என்பதால், அனைவரும் நெருங்கிப் பழகுகின்றனர். நாளடைவில் காதலிக்கின்றனர். இந்நிலையில், திடீரென்று 2 பெண்கள் வாந்தி எடுத்து மயக்கம் அடைகின்றனர். மருத்துவமனையில் அவர்களை பரிசோதித்த ஒரு டாக்டர், 2 பெண்களும் கர்ப்பமாக இருப்பதாக சொல்கிறார். இதனால் பெண்கள் அதிர்ச்சி அடைகின்றனர். அவர்களின் கர்ப்பத்துக்கு யார் காரணம்? பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

வேலைக்கு செல்லும் பெண்கள் எல்லா நேரமும் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு கருத்தை மையப்படுத்தி இயக்கியுள்ளார், ஜெயகாந்தன் ரெங்கசாமி. 4 இளைஞர்களாக கே.எம்.ஆர்., விஜயன், சரவணன்,ரஞ்சன், 4 இளம் பெண்களாக தர்ஷினி, திருக்குறளி, இந்து, சுபிக்‌ஷா, ஆடை நிறுவன முதலாளி ‘அருவா சண்ட’ இசக்கி ராஜா ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர். வில்லன் ரோலில் பிரியராஜா வித்தியாசமாக நடித்துள்ளார். ஒரே இடத்தில் வெவ்வேறு கோணங்களில் காட்சிகளை பதிவு செய்துள்ளார், ஒளிப்பதிவாளர் அரக்கோணம் யுவா. கதை நகர்வுக்கு ஜெ.கதிரின் பின்னணி இசை பேருதவி செய்துள்ளது. உண்மை சம்பவத்தை இன்னும் அழுத்தமாகவும், ஜனரஞ்சகமாகவும் படமாக்கி இருக்கலாம்.

Related Stories: