மெடிக்கல் ஷாப்பில் பணியாற்றி வரும் ஆதித்யா (ஆதிரன் சுரேஷ்), விக்கி (சி.ஆர்.ராகுல்), புகழ் (ராஜசிவன்) ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். தனியாக மெடிக்கல் ஷாப் நடத்தி முன்னேற வேண்டும் என்பது அவர்களுடைய லட்சியம். அதற்காக கடன் வாங்குகின்றனர். நகைகள் மற்றும் இடத்தை விற்று 6 லட்ச ரூபாய் சேர்க்கின்றனர். திடீரென்று அவ்வளவு பணமும் திருடு போய்விட, போலீசில் புகார் செய்கின்றனர். இந்நிலையில், ஊருக்கு செல்லும் அவர்கள் காணாமல் போகின்றனர். அவர்கள் ஏன் கடத்தப்பட்டனர்? அவர்களின் மெடிக்கல் ஷாப் லட்சியம் என்ன ஆனது என்பது மீதி கதை.
எளிமையாகவும், யதார்த்தமாகவும், அழுத்தமாகவும் முழுநீள சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை கொடுத்த அறிமுக இயக்குனர் தர்மாவுக்கு பாராட்டுகள். ஆதிரன் சுரேஷ், சி.ஆர்.ராகுல், ராஜசிவன் ஆகியோர் வெவ்வேறு குணம் கொண்டவர்களாக சிறப்பாக நடித்துள்ளனர். ஆக்ஷன் காட்சிகளில் ராஜசிவன் கவனத்தை ஈர்க்கிறார். வில்லன்களாக வின்சென்ட்.எஸ், மைக்கேல்.எஸ், சதீஷ் ராமதாஸ் மற்றும் பஞ்சர் ஒட்டும் பையன் தஷ்ணா, பணம் திருடும் விஜய் நிவாஸ், காரில் கடத்தப்படும் விஷ்ணு ஆகியோரும் இயல்பாக நடித்துள்ளனர். இது ஆண்கள் மட்டுமே நடித்த படம்.
சாந்தன் அன்பழகனின் பின்னணி இசை, படத்தை விறுவிறுப்பாக நகர்த்த உதவியுள்ளது. ஒளிப்பதிவாளர் லியோ வி.ராஜா, லொகேஷன்களை வெவ்வேறு கோணங்களில் காட்டி அசத்தியுள்ளார். எடிட்டர்கள் சுமித் பாண்டியன், பூமேஷ் தாஸ் மற்றும் சண்டைப் பயிற்சியாளர் தேசாய் கவனத்தை ஈர்க்கின்றனர். காரணம் இல்லாமல் எதுவும் நடக்காது. ஏற்கனவே எல்லாமும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை மையப்படுத்தி இயக்கியுள்ள தர்மா, ரிபீட் வசனங்கள் மற்றும் பிற்பகுதி காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம்.