ரூ.300 லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி பொறியாளருக்கு 1 ஆண்டு சிறை

*கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

கோவை : கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில், உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்தவர் துரைராஜ் (50). இவரிடம், மணியக்காரம்பாளையத்தை சேர்ந்த தனபாக்கியம் என்பவர் மின்இணைப்பை மாற்றி வழங்கவும், புதிதாக பியூஸ் கேரியர் பொருத்தவும் விண்ணப்பித்தார். இப்பணியை செய்துகொடுக்க ரூ.300 லஞ்சம் கொடுக்கவேண்டும் என உதவி பொறியாளர் துரைராஜ் அழுத்தம் கொடுத்துள்ளார்.

இதுபற்றி, தனபாக்கியம் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் அளித்த ஆலோசனைப்படி, ரசாயன பவுடர் தடவி லஞ்ச பணத்தை வழங்கியுள்ளார். இதை, துரைராஜ் பெற்றுக்கொண்டபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை, கையும், களவுமாக கைதுசெய்தனர். இச்சம்பவம் கடந்த 21.08.2009 அன்று நடந்தது.

இதுதொடர்பான வழக்கு, லஞ்ச புகார்களை விசாரிக்கும் கோவை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இவ்வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, துரைராஜ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட காரணத்தால், அவருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மோகனா ரம்யா தீர்ப்பு கூறினார்.

The post ரூ.300 லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி பொறியாளருக்கு 1 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: