அரசு மருத்துவமனை ஊழியரை தாக்கி நகை பறித்த 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை: கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: மருத்துவமனை ஊழியரை செங்கல் கொண்டு தாக்கி நகை பறித்த 2 வாலிபர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வார்டு பாயாக பணியாற்றி வந்த முருகன், உயிரிழந்த தன் நண்பரின் தாய் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டு இருந்ததை பார்க்க சென்றார். நண்பரிடம் துக்கம் விசாரித்து விட்டு, அங்கிருந்து வரும் போது மருத்துவமனை வளாகத்தில் வைத்து சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த கோகுல் (எ) கோகுலகிருஷ்ணன், கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த லாரன்ஸ் ஆகிய இருவரும் சேர்ந்து செங்கலை கொண்டு முருகனை பின்பக்கம் தாக்கி அவரிடம் இருந்து ஒரு சவரன் செயின் மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த முருகன், சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். இது தொடர்பாக முருகன் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய கீழ்ப்பாக்கம் போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட கோகுல், லாரன்ஸ் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த செயின் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை 18வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சொ.உமா மகேஸ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் கோகுல் மற்றும் லாரன்ஸ் ஆகியோருக்கு தலை 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மொத்தம் ரூ.14 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

The post அரசு மருத்துவமனை ஊழியரை தாக்கி நகை பறித்த 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை: கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: