ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சொகுசு காரில் கடத்தி வந்த 103 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

பல்லாவரம்: ஆந்திராவில் இருந்து சொகுசு கார் ஒன்றில் அதிகளவில் கஞ்சா கடத்தி வருவதாக நேற்று முன்தினம் பம்மல் சங்கர் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் தாம்பரம் – மதுரவாயல் புறவழிச்சாலையில், அனகாபுத்தூர் பாலத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடகா பதிவெண் கொண்ட சொகுசு கார் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. அதனை போலீசார் மறித்தபோது, காரின் உள்ளே 2 நபர்கள் இருந்தனர். அவர்களிடம் போலீசார் கார் எங்கிருந்து வருகிறது, காருக்கான ஆவணத்தை கொடுக்குமாறு கேட்டனர். அதற்கு, 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த போலீசார், காரின் பின்பக்க கதவை திறந்து பார்த்தபோது, பெரிய மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்த பார்சல்கள் இருந்தது.

அதனை பிரித்து பார்த்தபோது, அதில் சுமார் 103 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவற்றை காருடன் சேர்த்து பறிமுதல் செய்து, சங்கர் நகர் காவல் நிலையம் கொண்டு சென்றனர். விசாரணையில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, அம்மன் கோயில் தெருவை சேர்ந்த டேனியல் ராஜா (34), மதுரை மேலமடை, பாண்டியன் நகர் 2வது தெருவை சேர்ந்த பரமன் (45) என்பதும், இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, அதனை தமிழகம் முழுவதும் விற்க முயன்றது தெரியவந்தது. இந்த கஞ்சா கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைதான 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சொகுசு காரில் கடத்தி வந்த 103 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: