* போலீசாரை நோக்கி நாட்டு துப்பாக்கியால் சுட முயன்ற போது நடவடிக்கை
* ஆள்கடத்தல் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்
சென்னை: சென்னையில் நகைக்கடை உரிமையாளர் மகனை கடத்தி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்ட வழக்கில், பதுக்கி வைக்கப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்ய கிண்டி ரேஸ்கோர்ஸ் அருகே அழைத்து வந்த போது தென்மாவட்ட பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜா போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்ற போது, போலீசார் தற்பாதுகாப்புக்காக ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பெருநகர காவல் எல்லையில் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி இரவு நேரங்களில் 104 காவல் நிலைய எல்லைகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் வேளச்சேரி விஜயநகர் பகுதியில் போலீசார் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வாகனத்தில் வந்த நபர்களை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது. 5 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள நகைக்கடை நடத்தும் தொழிலதிபர் ஒருவரின் மகனை கடத்தி ரூ.2 கோடி பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது. உடனே 5 பேரையும் வேளச்சேரி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஆள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி தென்மாவட்டத்தில் பிரபல ரவுடியாக வலம் வரும் தூத்துக்குடியை சேர்ந்த ைஹகோர்ட் மகாராஜா பின்னணியில் இருந்தது தெரியவந்தது. இவர் தான் தொழிலதிபரின் மகனை கடத்தி பணம் பறிக்கும் நோக்கில் ஆட்களை அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்தது.
உடனே போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை கைது செய்ய 2 தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்படி தனிப்படை போலீசார் கடந்த 2 நாட்களாக மகாராஜாவின் பூர்வீக ஊரான சுந்தரவேல்புரம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை போலீசார் தன்னை தேடுவதை அறிந்த ரவுடி ஹைகோர்ட் மகாராஜா திருநெல்வேலிக்கு தப்பி சென்றது தெரியவந்தது. உடனே மற்றொரு தனிப்படை திருநெல்வேலிக்கு சென்று செல்போன் சிக்னல் உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நேற்று அதிகாலை திருநெல்வேலியில் உள்ள மார்க்கெட் பகுதியில் வைத்து பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை தனிப்படையினர் கைது செய்தனர். பின்னர் ஹைகோர்ட் மகாராஜாவை சென்னைக்கு நேற்று இரவு அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, தொழிலதிபர் மகனை கடத்தி ரூ.2 கோடி அளவுக்கு பணம் பறிக்கும் திட்டத்தில் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண்டார்.
அதனை தொடர்ந்து தொழிலதிபர் மகனை பின் தொடர பயன்படுத்திய பைக் ஒன்று கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் பதுக்கு வைத்திருப்பதாக ரவுடி ஹைகோர்ட் மகாராஜா போலீசாரிடம் தெரிவித்தார். அதன்படி இன்று அதிகாலை வேளச்சேரி காவல் நிலையத்தில் இருந்து வாகனத்தில் ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அழைத்து வந்தனர். அப்போது கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் போலீசாரை அங்கும் இங்கும் என ஒரு மணி நேரத்திற்கும் மேல் வாகனத்தை அடையாளம் காட்டுவதாக அலைக்கழித்துள்ளார். ஒரு கட்டத்தில் அதிகாலை 4.15 மணிக்கு குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய பைக்கை ஹைகோர்ட் மகாராஜா போலீசாருக்கு அடையாளம் காட்டினார். அப்போது ரவுடி ஹைகோர்ட் மகாராஜா பைக்கை எடுக்க முயன்ற போது அதில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் போலீசாரை நோக்கி சுட்டு விடுவேன் என்று கூறியபடி தப்பித்து ஓடினார்.
அப்போது தங்களது தற்பாதுகாப்புக்காக உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் வைத்திருந்த துப்பாக்கியால் ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவின் கால்களை குறிவைத்து சுட்டார். அப்போது அவனுக்கு வலது காலில் குண்டு பாய்ந்து ஓட முடியாமல் விழுந்தான். உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்து அவர் கையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பின்னர் குண்டு அடிப்பட்டு படுகாயமடைந்த ஹைகோர்ட் மகாராஜாவை ேபாலீசார் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இருந்தாலும் நகைக்கடை தொழிலதிபரின் மகனை கடத்த பெரிய தொகையை ரவுடி ஹைகோர்ட் மகாராஜா வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் தொழிலதிபர் மகனை கடத்த யார் பணம் கொடுத்தது. எதற்காக தொழிலதிபர் மகனை திட்டமிடப்பட்டது என்பது குறித்து வேளச்சேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேநேரம் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் கிண்டி காவல் நிலைய எல்லையில் உள்ளதால், துப்பாக்கி சுடு சம்பவம் குறித்து கிண்டி போலீசார் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் உயர் காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதேபோல் தடயவியல் துறை அதிகாரிகளும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த பகுதியில் ஆய்வு செய்து தடயங்களை கைப்பற்றினர். இந்த சம்பவத்தால் கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகே இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
யார் அந்த ஹைகோர்ட் மகாராஜா
தூத்துக்குடி மாவட்டம் சுந்தரவேல்புரத்தை சேர்ந்த சின்னதுரை என்பவரின் மகன் தான் ஹைகோர்ட் மகாராஜா(34). இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர் தூத்துக்குடி வடபாகம் காவல்நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி. தூத்துக்குடி மாவட்ட ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடி பட்டியலிலும் உள்ளார். ஆள் கடத்தலில் மிகவும் கைதேர்ந்தவர். இவர் கடந்த 2017ம் ஆண்டு முத்துமாரி என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் இவரது காதலை அவர் ஏற்கவில்லை. இதனால் அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்தான். அதேபோல் கடந்த ஆண்டு குஜராத் ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி ஒருவரின் தூண்டுதலின் பெயரில் மதுரையில் ரூ.2 கோடி கேட்டு சிறுவனை கடத்திய வழக்கு, விளாத்திக்குளத்தில் போலீசாரை தாக்கி மிளகாய் பொடி தூவிவிட்டு தப்பி ஓடிய வழக்கு என தமிழகம் முழுவதும் ஆள்கடத்தல் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. கொடூர குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post சென்னையில் நகைக்கடை உரிமையாளர் மகனை கடத்தி பணம் பறிக்க முயன்ற வழக்கு: தென்மாவட்ட பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜா துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு appeared first on Dinakaran.