பட்டுக்கோட்டை, மே 21: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை மாதா கோயில் தெருவில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தஞ்சை மாவட்டத்தில் 2024 – 2025 ம் கல்வியாண்டில் பிளஸ்2 பயின்ற மாணவர்கள் அனைவரும் உயர்கல்வியில் சேர்வதற்கான கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, திருவோணம், மற்றும் சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களைச் சேர்ந்த சுமார் 600 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வருகைதந்த அனைவரையும் கரம்பயம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மணிமாறன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை கலந்து கொண்டு திட்ட விளக்கவுரையாற்றினார். நிகழ்ச்சியில் துறை சார்ந்த வல்லுநர்கள் கலந்து கொ ண்டு சட்டம், பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளில் உயர்கல்வி வழிகாட்டுதல்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கினர். நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட தொழில்நுட்பம், மருத்துவம், சட்டம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு அரங்குகள் அமைத்து மாணவர்களுக்கு வழிகாட்டினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரிக் கனவு கையேடு வழங்கப்பட்டது. உயர்கல்வி நிறுவனங்கள் வழங்கும் உதவித்தொகை மற்றும் உயர்கல்வியில் சேர்வதற்கு வங்கிகள் வழங்கும் கல்விக்கடன் குறித்து விள க்கமளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவ ட்டக்கல்வி அலுவலர் (இடைநிலை) மாதவன், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) பழனிவேல், மாவட்டக் கல்லூரி கனவு ஒருங்கிணைப்பாளர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். முடிவில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் ரமேஷ்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக முதன்மைக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் (மேல்நிலை) தெட்சிணாமூர்த்தி, தம்பிக்கோட்டை வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மணியரசன், முதன்மை கல்வி அலுவலக பள்ளித் துணை ஆய்வாளர் மாதவன், முதுகலை ஆசிரியர்கள் மாணிக்கம், கணேசமூர்த்தி, குமரவேல் மற்றும் ஆசிரியர்கள் செயல்பட்டனர்.
The post பட்டுக்கோட்டை மாணவர்களுக்கு கல்லூரிக்கனவு வழிகாட்டி நிகழ்ச்சி appeared first on Dinakaran.