பெரம்பலூர், ஜூன். 12: பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4,706 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ37.61 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ், எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் வழங்கினர். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நேற்று (11ஆம்தேதி) நடந்த விழாவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களை சார்ந்த, சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு, வாழ்வாதார மேம்பாடு அடைவதற்காக, வங்கிக் கடன்கள் வழங்கினார். இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியினை கலெக்டர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் சட்ட மன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கிலிருந்து நேரலையில் பார்வையிட்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருடந்தோறும் மகளிர் சுய உதவிக்குழு தினம் என்ற நாளை அறிவித்து, அந்நாளில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் இணைப்புக்கான ஆணைகள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதனால், மகளிர் சுய குழுக்கள் வெற்றிகரமாக செயல்படுத் தப்பட்டு, தற்போது சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைந்துள்ளது. மேலும், மகளிரைக் கொண்டு, சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, முறையான பயிற்சிகள் வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார திட்டம் மூலமாக வழங்கப்படுகிறது. தற்போது நலிவுற்றோரை ஒருங்கிணைத்து, சிறப்புக் குழுக்களும், மாற்றுத்திறனாளிகள் குழுக்கள் மற்றும் முதியோர்களைக் கொண்ட மதி குழுக்களும் அமைக்கப் பட்டு வருகின்றன. மகளிர் வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் பெறவும், சுயமாக தொழில் செய்து வாழ்வில் முன்னேறவும் செயல்படுத்தப் படும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் ஏராளமான மகளிர் பயன் பெற்றுள்ளனர்.
அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 467 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 4,706 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ. 37.61 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புக்கான ஆணைகளை மாவட்டக் கலெக்டரும், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், அட்மா தலைவர் ஜெகதீசன், மகளிர் திட்ட அலுவலர் (பொ) ரேச்சல் கலைச்செல்வி, உதவி திட்ட அலுவலர்கள் சிவக்குமார், கிருஷ்ணன், சங்கர், முருக தாஸ், பேரூராட்சி தலைவர்கள் சங்கீதா ரமேஷ் (குரும்பலூர்), ஜாகிர் உசேன் (லப்பைக்குடிகாடு), மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். மகளிர் சுய உதவிக்குழு கண்காட்சி அரங்குகள் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகளை கலெக்டரும் எம்எல்ஏவும் பார்வையிட்டு, மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து விற்பனை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனைக வழங்கினர்.
The post பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.37.61 கோடியில் மகளில் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி appeared first on Dinakaran.