பெரம்பலூர், ஜூன் 12: பெரம்பலூர் நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டுமென பெரம்பலூர் மாவட்ட மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட, மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மக்கள் சக்தி இயக்கத மாவட்ட செயலாளர் சிவக் குமார் தலைமை வகித்தார். முன்னதாக மாவட்ட பொருளாளர் வெங்கடாசலம் வரவேற்றார். மாவட்ட ஆலோசகர் வைரமணி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் இயக்க வளர்ச்சி, செயல்பாடுகள் குறித்தும், மது, மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குவது, கையெழுத்து இயக்கம் நடத்துவது குறித்தும் பேசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், பெரம்பலூர் நகரில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏற்படும் விபத்து மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் கூடுதல் போக்குவரத்து காவலர்களை நியமனம் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அடிக்கடி ஏற்படும் வாகன விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தவிர்க்கும் வகையில் திருமாந்துறை டோல் பிளாசா அருகே வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சிறு ஓய்வு எடுத்து செல்லும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய சிறிதுநேர ஓய்வு மையம் அமைக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத மகளிர் சுகாதார வளாகங்களை மேம்படுத்தி செயல்படுத்திட மாவட்டக் கலெக்டரை கேட்டுக்கொள்வது. பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் சிறப்பு பிரிவு மருத்துவர்களை நியமனம் செய்திட கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பெரம்பலூர் நகர செயலாளர் காமராஜ் நன்றி தெரிவித்தார்.
The post பெரம்பலூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதலாக காவலர்களை நியமிக்க வேண்டும் appeared first on Dinakaran.