நாகப்பட்டினம், ஜூன் 12: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோடை மழையால் பருத்தி விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பணப்பயிர்களில் முக்கிய இடத்தை பருத்தி பிடித்துள்ளது. இந்திய பொருளாதாரம், தொழில்துறையில் ஆதிக்கம் செலுத்தும் பயிராகவும் பருத்தி உள்ளது. ஏற்றுமதி துறையில் முக்கிய பங்கு ஜவுளி துறையின் மூலப்பொருளான பருத்திக்கு உண்டு. இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருத்தி சாகுபடி முக்கிய தொழிலாக உள்ளது. நூல் விலை உயர்வு, குறைந்த அளவு தண்ணீர், அதிக திறன் கொண்ட புதிய ரக பருத்தி ரகங்கள் உள்ளிட்ட காரணங்களால் தற்போது பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்தூர், திருப்புகலூர், வவ்வாலடி, அம்பல், போலகம், பொறக்குடி, இடையாத்தங்குடி, மருங்கூர், திருப்பயத்தங்குடி, வாழ்குடி, எரவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது.
நடப்பு ஆண்டில் செடியின் இயல்பான வளர்ச்சி இல்லாத நிலையில் பூ பிடிக்கும் தருணத்தில் திடிரென கோடை மழை பெய்தது. இதனால் பெரும்பாலான பூக்கள் உதிர்ந்ததோடு மட்டுமல்லாமல் மிஞ்சிய பூக்களிலும் பிஞ்சுகள் போதிய அளவில் பிடிக்கவில்லை. இதனால் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பருத்தி விளைச்சல் அதிகரித்து நல்ல விலை கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதோடு விலையும் குறைந்துள்ளது. இந்நிலையில் எடுத்த மகசூலை சந்தைக்கு அனுப்பி விற்க செல்லும் போது அதற்கு போதிய விலையும் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் ரூ. 7ஆயிரத்துக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது விலை பாதியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு பருத்தி நன்றாக விளைந்ததோடு மட்டுமில்லாமல் அதிக விலைக்கு விற்பனையானது.
இந்த ஆண்டு மகசூல் குறைந்ததோடு, உரிய விலையும் கிடைக்கவில்லை. இதனால் பருத்தி சாகுபடிக்காக செலவழித்த தொகையாவது கிடைக்குமா என்ற கவலையில் விவசாயிகள் ஆழ்ந்துள்ளனர். சில விவசாயிகள் கடன் வாங்கி பருத்தி சாகுபடி செய்துள்ள நிலையில் தற்போது கடனை அடைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருமருகல் பகுதியை சேர்ந்த பருத்தி சாகுபடி செய்த விவசாயிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு பருத்தி நல்ல மகசூல் இருந்ததோடு, நல்ல விலையும் கிடைத்தது. ஒரு கிலோ பருத்தி ரூ.60 முதல் ரூ.110 வரை விலைபோனது. இந்த ஆண்டு பருத்தியை ஆரம்பத்தில் அறுவடை செய்து கமிஷன் கடைக்கு கொண்டு சென்றபோது ரூ.50க்கு தான் வாங்குகின்றனர். விலை உயரும் என்ற நம்பிக்கையுடன் தான் தொடர்ந்து பருத்தியை சாகுபடி செய்து வருகிறோம். அரசு பருத்தி விலையை நிர்ணயம் செய்து விவசாயிகளின் மனக்கவலையை போக்க வேண்டும். திடீரென பெய்த கோடை மழை பருத்தி சாகுபடி மற்றும் அறுவடை பணிகளை முழுவதுமாக பாதித்துவிட்டது. எனவே அரசு உரிய கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.
The post விளைச்சல் இல்லாத நிலையில் விலையும் குறைந்தது: நெல்லை போலவே பருத்திக்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் appeared first on Dinakaran.