மாடக்குளம் கண்மாய் சீரமைப்பு பணிகள்: ரூ.9.50 லட்சத்திற்கு மரங்கள் ஏலம்

மதுரை, மே 17: மதுரையில் மாடக்குளம் கண்மாய் சீரமைப்பு திட்டத்திற்காக அச்சம்பத்து சாலையோரம் உள்ள மரங்களை அகற்ற முடிவு செய்யப்பட்டு, ரூ.9.50 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது. மதுரையின் பழமைகளில் ஒன்றான மாடக்குளம் கண்மாயின் நீர்ப்பிடிப்பு பகுதி 120 ஏக்கராக உள்ளது. வைகை ஆற்றிலிருந்து நேரடி கால்வாய், நிலையூர் கால்வாய் மற்றும் மழைநீரால் நிரம்புகிறது. வைகை ஆற்றிலிருந்து கண்மாய்க்கு தண்ணீர் வரும் பகுதி பள்ளமானதால், கொடிமங்கலம் அருகே ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டு, அதிலிருந்து 12.8 கி.மீ நீளத்திற்கு மாடக்குளம் கால்வாய் தூர்வாரப்பட்டு கண்மாய்க்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டது.

இக்கண்மாயை சீரமைக்க ரூ.17.53 கோடி நிதி ஒதுக்கப்பட்டு நீர்வளத்துறை சார்பில் கடந்த ஜனவரியில் பணிகள் துவங்கின. முதற்கட்டமாக மேலமாத்தூரில் சேதமடைந்திருந்த கண்மாய்க்கு தண்ணீர் திறக்கும் நான்கு ஷட்டர்கள் மாற்றப்பட்டன. தொடர்ந்து, கண்மாயின் நீர்வரத்து கால்வாய் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதை சீரமைக்கும் விதமாக கோயில்கள், வீடுகள் உட்பட 15க்கும் அதிகமான கட்டிடங்களை இடிக்க கடந்த பிப்ரவரி மாதம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.. கடந்த மார்ச் 5ல் கட்டிடங்களை இடிக்கும் பணிகள் துவங்கிய நிலையில், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நிறுத்தப்பட்டன.

அதேநேரம், நீர்வரத்து கால்வாயை தூர்வாரி அதில், கழிவுநீர் கலப்பதை தடுக்க இருபுறமும் உள்ள மரங்களை அகற்ற ஏலம் விடப்பட்டுள்ளது. இது குறித்து, நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘இத்திட்டத்திற்காக 144 மரங்களை அகற்ற முடிவு செய்து ரூ.9.50 லட்சத்திற்கு அவை ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த பணிகள் ஓரிரு நாட்களில் துவங்கப்படும். சில கட்டிடங்கள் பட்டா பெற்றிருந்தாலும், அவை அரசு ஆவணங்களில் நீர்நிலை புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து, உயரதிகாரிகளுடன் ஆலோசித்து வரும் நிலையில், இந்த பணிகளையும் விரைவில் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது,’’ என்றனர்.

The post மாடக்குளம் கண்மாய் சீரமைப்பு பணிகள்: ரூ.9.50 லட்சத்திற்கு மரங்கள் ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: