இ-சேவை மையத்தில் நிலம் அளவீடுக்கு விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர், மார்ச் 22: இ-சேவை மையத்தின் மூலம் நில அளவீடு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் சமர்ப்பித்து வந்த நிலையில், வட்ட அலுவலகங்களுக்கு செல்லாமல், https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் தேதி தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.

இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நில அளவை செய்ய ‘எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்’ நில அளவை கட்டணம் உள்பட அனைத்து கட்டணங்களையும் செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், சிட்டிசன் போர்ட்டல் மூலமாக இணையவழியில் செலுத்தி இணைய வழியாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது இச்சேவையினை தமிழ்நாடு முழுவதும் அனைத்து பொதுசேவை மையங்கள் (இ-சேவை) மூலமாகவும் விண்ணப்பிக்கும் வகையில் இவ்வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய, இணைய வழியாக விண்ணப்பிக்க இ-சேவை மையங்களை அணுகி, நில அளவைக்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது செல்போனில் தெரிவிக்கப்படும். மேலும், நில அளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நில அளவர் கையொப்பமிட்ட ‘அறிக்கை, வரைபடம்’ நில அளவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு, மனுதாரர் https://eservices.tn.gov.in/ என்ற இணையவழிச் சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

The post இ-சேவை மையத்தில் நிலம் அளவீடுக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: