ஆர்.கே.பேட்டை அருகே சேதமான டிரான்ஸ்பார்மர் மாற்றியமைக்க கோரிக்கை

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே எலும்பு கூடாய் காட்சியளிக்கும் டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆர்.கே.பேட்டை அடுத்த ராஜாநகரம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, ராஜாநகரம் பகுதியில் மாநில நெடுஞ்சாலையோரம் குடியிருப்பு அருகில் டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. இந்த, சாலை வழியாக பள்ளி மாணவ – மாணவிகள், வேலைக்குச் செல்பவர்கள், முதியோர்கள் என அனைவரும் சென்று வருகின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த டிரான்ஸ்பார்மர் கம்பம், தற்போது எலும்பு கூடாய் காட்சியளிக்கின்றது. எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து கீழே விழுந்து ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட இளநிலை உதவி பொறியாளர் அலுவலகத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தும். இதுவரையும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் மின்கம்பத்தை அகற்றி, புதிய மின் கம்பத்தை அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆர்.கே.பேட்டை அருகே சேதமான டிரான்ஸ்பார்மர் மாற்றியமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: