சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு அடுத்ததாக திருவள்ளூரில் 4வது ரயில் முனையம் அமைக்க ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை மனு

திருவள்ளூர்: சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு அடுத்ததாக, திருவள்ளூரில் 4வது ரயில் முனையம் அமைக்க வேண்டும் என ரயில்வே அமைச்சருக்கு வழங்கிய கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட தலைநகரான திருவள்ளூர் நகர மக்களின் பிரதான போக்குவரத்தாக இருப்பது ரயில் போக்குவரத்தாகும். தற்போது திருவள்ளூர் ரயில் நிலையம் வழியாக நாள்தோறும் 180 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும், 22 எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. திருவள்ளூர் ரயில் நிலையத்தை நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பயணிகள் பயன்படுத்துகின்றனர். திருவள்ளூர் ரயில் நிலையத்தை என்எஸ்ஜி 2 (நான் சபர்பன் கிரேட்2) என்று ரயில்வே நிர்வாகம் தரம் பிரித்து தெரிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு அடுத்த நிலையில் திருவள்ளூர் ரயில் நிலையம் உள்ளது. ரயில்வே கோட்ட ரயில் தலைமை இடமான திருச்சி, சேலம் மற்றும் பாலக்காடு ஆகிய ரயில் நிலையங்கள் என்எஸ்ஜி 3 என்ற நிலையில் இருக்கும்போது, திருவள்ளூர் ரயில் நிலையம் அதற்கும் ஒரு படி மேலே என்எஸ்ஜி 2 என்ற நிலையில் உள்ளது. திருவள்ளூர் ரயில் நிலையம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். சென்னை புறநகரில் முக்கிய நகரமாகவும், மாவட்ட தலைநகரமாகவும் திருவள்ளூர் உள்ளது. இங்கிருந்து தினமும் பல ஆயிரகணக்கானோர், இருங்காட்டுக்கோட்டை தொழிற்பேட்டை, வல்லம் தொழிற்பேட்டை, ஒரகடம் தொழிற்பேட்டை, காக்களூர் தொழிற்பேட்டை பகுதி மற்றும் பெரும்புதுார் தொழிற்பேட்டைக்கு சென்று வேலை செய்கின்றனர்.

இந்த வழித்தடத்தில் அரக்கோணம், ஆவடி, அம்பத்தூர் போன்ற முக்கிய ரயில் நிலையங்கள் இருக்கின்றன. சென்ட்ரலில் இருந்து பெரம்பூர் ரயில் நிலையம் வழியாக தினமும் 250க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் பெரம்பூரில் நான்காவது புதிய ரயில் முனையம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரம்பூரில் புதிய முனையம் செயல்பாட்டிற்கு வந்தால், அங்கிருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், புறநகர் ரயில் பாதைகளை கடந்து சென்று பிரதான எக்ஸ்பிரஸ் பாதையை அடைய வேண்டும். இதனால், புறநகர் ரயில்கள் தாமதமாவதோடு, பயணியர் சேவைக்கு பெறும் இடையூறு ஏற்படும்.

இந்தநிலையில், திருவள்ளூர் நகர மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷணவ்-க்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து 42 கி.மீ., தூரத்தில் உள்ள திருவள்ளூரில் புதிய ரயில் முனையம் அமைக்க ரயில்வே துறை பரிந்துரை செய்ய வேண்டும். இங்கு போதிய நிலம் இருப்பதோடு, இதற்கான அனைத்து வசதியும் உள்ளன. அருகில் உள்ள தொழில்துறை மையங்கள் மற்றும் புதிய சர்வதேச விமான நிலையமும் அமைய உள்ளதால், பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், இந்த வழியாக செல்லும் அனைத்து விரைவு ரயில்களும், திருவள்ளூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், இங்குள்ள பயணியர் சென்ட்ரல் வந்து விரைவு ரயில்களில் பயணம் செய்வதை தவிர்க்க முடியும். இவ்வாறு கூறியுள்ளார்.

The post சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு அடுத்ததாக திருவள்ளூரில் 4வது ரயில் முனையம் அமைக்க ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை மனு appeared first on Dinakaran.

Related Stories: