அரவக்குறிச்சி அரசு பள்ளியின் வெளிப்புறம் திறந்தவெளி கழிவுநீர் கால்வாய்க்கு கான்கிரீட் மூடி அமைக்க வேண்டும் பெற்றோர்கள், பொதுமக்கள் கோரிக்கை

அரவக்குறிச்சி, மார்ச் 20: அரவக்குறிச்சி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி வெளிப்புறம் கழிவுநீர் கால்வாய்க்கு கான்கிரீட் மூடி அமைத்து தர பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் 6ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி கரூர் சாலையில் செயல்பட்டு வருகிறது. இதில், 500க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியை ஒட்டி பல ஆண்டுகளாக திறந்தவெளி கழிவு நீர் கால்வாய் செல்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலை துறையினரால் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்றது.

இப்பணியால் கழிவுநீர் கால்வாய் சாலையின் மட்டத்தை விட ஒரு அடிக்கும் தாழ்வாக மாறியது. மேலும் மழைக்காலங்களில் திறந்தவெளி கழிவுநீர் கால்வாயில் மாணவிகள் தவறி விழுந்த சம்பவங்களும் உள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பள்ளப்பட்டியில் சிறுவன் ஒருவன் கழிவு நீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோல ஒரு சம்பவம் நடந்து விடாமல் தடுக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி வெளிப்புறம் உள்ள கழிவுநீர் கால்வாய்க்கு கான்கிரீட் மூடி அமைத்து தர வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அரவக்குறிச்சி அரசு பள்ளியின் வெளிப்புறம் திறந்தவெளி கழிவுநீர் கால்வாய்க்கு கான்கிரீட் மூடி அமைக்க வேண்டும் பெற்றோர்கள், பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: