சென்னை: பவன் கல்யாண், நிதி அகர்வால், பாபி தியோல், சத்யராஜ், நாசர், தலைவாசல் விஜய், சுனில் நடித்துள்ள பான் இந்தியா படம், ‘ஹரி ஹர வீர மல்லு’. மெகா சூர்யா மூவிஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, அவரது மகன் ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா இயக்கியுள்ளார். எம்.எம்.கீரவாணி இசை.. வரும் ஜூன் 12ம் தேதி திரைக்கு வரும் இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா பேசியதாவது: கடந்த 8 வருடங்களாக நான் படம் இயக்காததற்கு காரணம் அஜித் சார். என்னிடம் அவர், ‘உங்கள் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை.
அவரை நன்கு கவனித்துக்கொள்ளுங்கள். தயாரிப்பு வேலைகளை பாருங்கள். அது உங்களுக்கு நன்றாக வரும்’ என்றார். என்னை பற்றியும், என் அப்பாவை பற்றியும் அவர் சிந்திக்கிறாரே என்று வியந்த நான், அன்றுடன் டைரக்ஷனுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். நான் தயாரிக்க வேண்டும் என்றால் படம் வேண்டுமே என்றேன். உடனே அஜித் சார், தொடர்ந்து 3 படங்களுக்கு கால்ஷீட் கொடுத்தார். ‘ஆரம்பம்’, ‘என்னை அறிந்தால்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களை அவரது நடிப்பில் தயாரித்தேன். அடுத்து ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் 2ம் பாகம் உருவாகும் என்பதை அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன்.