சென்னை: தமிழ் சினிமா இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 47. 2013ம் ஆண்டு வெளியான ‘மதயானைக் கூட்டம்’ மற்றும் 2023ம் ஆண்டு வெளியான ‘ராவணக்கோட்டம்’ ஆகிய படங்களை இயக்கி உள்ளார். மேலும் பல படங்களில் பணியாற்றி உள்ள விக்ரம் சுகுமாரனின் திடீர் மறைவு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனரான இவர் வெற்றிமாறனுடன் இணைந்து ‘ஆடுகளம்’ படத்தில் வசனம் எழுதி உள்ளார். மேலும் ‘பொல்லாதவன்’ மற்றும் ‘கொடி வீரன்’ போன்ற படங்களில் நடித்தும் உள்ளார்.
2013-ம் ஆண்டு ‘மதயானைக்கூட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருக்கு நல்ல ஒரு பெயர் கிடைத்தது. இருப்பினும் அடுத்த படம் உடனடியாக கிடைக்கவில்லை. 2023ம் ஆண்டு சாந்தனுவை ஹீரோவாக வைத்து ‘ராவணக்கோட்டம்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்நிலையில் மதுரையை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்து புதிய படத்துக்காக கதை கூறியுள்ளார். பின்னர் நேற்றுமுன்தினம் இரவு சென்னைக்கு புறப்படுவதற்கு பஸ் ஏறியுள்ளார். அப்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அவரது மனைவி, குழந்தைகள் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் வசிக்கின்றனர்.