ஐதராபாத்: தெலுங்கு முன்னணி இயக்குனர் புரி ஜெகன்நாத், தனது நெருங்கிய தோழியும், நடிகையுமான சார்மியுடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் குறித்து சமீபத்தில் அறிவித்தார். பான் இந்தியா படமாக உருவாகும் இதை புரி ஜெகன்நாத் இயக்குகிறார். இதில், இதுவரையில் எந்த படத்திலும் தோன்றாத கேரக்டரில் விஜய் சேதுபதி நடிப்பதாக படக்குழுவினர் கூறியிருந்தனர். யுகாதி பண்டிகையன்று அறிவிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்குகிறது. பாலிவுட் முன்னணி நடிகையும், மற்ற மொழிகளில் நடித்து வருபவருமான தபு ஹீரோயினாக நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இன்னொரு ஹீரோயினாக ராதிகா ஆப்தே நடிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ராதிகா ஆப்தே அளித்த பேட்டியில், இப்படத்தில் நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அய்யோ கடவுளே, இந்த செய்தி பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அப்படத்தில் நான் நடிக்கவில்லை. என்னை பற்றி இதுபோன்ற செய்தி வருவது செம ஜோக்காக இருக்கிறது’ என்றார். தற்போது அவருக்கு பதிலாக நிவேதா தாமஸ் ஒப்பந்தமாகியுள்ளார். கமல்ஹாசனின் ’பாபநாசம்’, ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’, விஜய்யின் ’ஜில்லா’ உள்பட பல படங்களில் நடித்துள்ள நிவேதா தாமஸ், இப்படத்தில் நடிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. விஜய் சேதுபதி படத்தில் நடிக்காதது குறித்து ராதிகா ஆப்தே கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.