ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் நடித்துள்ள ‘ஹரி ஹர வீர மல்லு’ என்ற பான் இந்தியா படம், வரும் ஜூன் 12ம் தேதி திரைக்கு வருகிறது. மெகா சூர்யா மூவிஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ள இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. நிதி அகர்வால், சத்யராஜ், நாசர், தலைவாசல் விஜய், ஆஸ்கர் விருது வென்ற இசை அமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, இயக்குனர் ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா கலந்துகொண்டனர். அப்போது கலகலப்பாக பேசிய சத்யராஜ், ‘நிதி அகர்வால் கோபித்துக்கொள்ள வேண்டாம். இந்த படத்தில் உண்மையான ஹீரோயின் நிதி அகர்வால் இல்லை, நான்தான் ஹீரோயின்.
எப்போதுமே படத்தில் ஹீரோவின் வேலை என்ன? ஹீரோயினை காப்பாற்றுவதுதானே. இந்த படத்தில் பவன் கல்யாண் என்னைத்தான் காப்பாற்றுகிறார். நியாயமாக பார்த்தால், நான்தானே ஹீரோயின்?’ என்று நிதி அகர்வாலை பார்த்து கேட்டார். சத்யராஜுக்கு பதில் சொல்ல முடியாமல் மிரண்ட நிதி அகர்வால், இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தியில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். மலையாளம் மற்றும் கன்னடத்தில் நடிக்கவில்லை. அடுத்து பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார்.