சென்னை: காதல் உணர்வை சொல்லும் ‘ஆழி’ என்கிற சுயாதீன பாடல் ஆல்பம் உருவாகி உள்ளது. இந்த ஆல்பத்தை ஜெயின்ட் மியூசிக் நிறுவனத்தின் சார்பில் வசந்த் ராமசாமி தயாரித்துள்ளார். ஈஷான் இயக்கி உள்ளார். நடிகர் எஸ்.எஸ் .ஆரின் பேரன் ஆரியன் இசையமைத்துள்ளார். ‘ஆழி’ பாடல் ஆல்பம் வெளியீட்டு நிகழ்ச்சியில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே.ராஜன், இயக்குனர் பேரரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . நிகழ்ச்சியில் கே. ராஜன் பேசும்போது, ‘‘இந்தஆழி ‘ பாடல் ஆல்பத்தில் நடித்துள்ள நடிகரும் நடிகையும் இந்த விளம்பர நிகழ்ச்சிக்கு வரவில்லை.
வருத்தமாக இருக்கிறது. இன்று தயாரிப்பாளர்கள் மிகவும் சிரமத்தில் இருக்கிறார்கள். ஒரு நடிகர் முதல் படத்தில் 25 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினார். அந்தப் படம் ஓடியதும் அடுத்த படத்தில் இரண்டு கோடி என்றார். ஒரு படம் வெற்றி பெற்றால் இயக்குனர், தயாரிப்பாளரை விட நடிகருக்குத்தான் பலன் கிடைக்கும். இங்கே இந்த புரமோஷன் நிகழ்ச்சிக்கு வராத நடிகர் கதிரவன் என்ற நடிகரையும் நமிதா கிருஷ்ணமூர்த்தி என்ற நடிகையையும் நான் கண்டிக்கிறேன். இப்படிப்பட்டவர்களைத் தமிழ் சினிமா புறக்கணிக்க வேண்டும்’’ என்றார்.