மணிரத்னம் கேரக்டரை விமர்சித்த சுஹாசினி

கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ் நடித்துள்ள ‘தக் லைஃப்’ என்ற படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். ‘நாயகன்’ படத்தில் இணைந்த மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணி, 37 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் டிரைலர் மற்றும் ‘ஜிங்குச்சா’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் புரமோஷன் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. இந்நிலையில், தனது கணவர் மணிரத்னம் பற்றி சுஹாசினி பேசிய விஷயம் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுஹாசினி கூறுகையில், ‘மணிரத்னத்துக்கும், எனக்கும் சரியான புரிதல் இருப்பது இசை என்ற ஒரு விஷயத்தில்தான். அவர் மிகவும் பொறுமைசாலி. அவர் எல்லாவற்றையும் ரொம்ப ஈஸியாக எடுத்துக்கொள்வார். நான் அவரிடம் சண்டை போட வேண்டும் என்ற எண்ணத்தில் சென்றால் கூட, அந்த சூழ்நிலையை காமெடியாக மாற்றிவிடுவார். எங்கள் தலையில் இடியே விழக்கூடிய விஷயமாக இருந்தாலும் கூட, அதை காமெடியாக மாற்றிய பல தருணங்கள் இருக்கிறது. சினிமா எங்களுக்கு ஒரு பந்தமாக இருக்கிறது. எனது வேலைகளில் அவர் பெரிதாக தலையிட மாட்டார்.

காரணம், அதை கவனிக்கக்கூடிய அளவு கூட அவருக்கு நேரம் இருக்காது. அவரது பணிகளில் முழுமையாக மூழ்கி விடுவார். என்னை பொறுத்தவரையில், கணவர் அவசரமாக வேலைக்கு செல்லும்போது, ‘காபி வேண்டுமா?’ என்று கேட்பவர் மனைவி இல்லை. ‘செல்லும் இடத்தில் உங்களுக்கு காபி கிடைக்குமா?’ என்று கேட்பவரே உண்மையான மனைவி. சின்னச்சின்ன விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருந்துவிட்டு, பெரிய விஷயங்களை எளிதாக கைவிடுவதில் எந்தவொரு அர்த்தமும் இல்லை’ என்றார்.

Related Stories: