திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் நேற்று வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த ஏப்ரல் மாதம் 8ம் தேதி தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கியது. மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றக்கூடிய மசோதாக்களுக்கு மூன்று மாத காலத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதேபோல் ஜனாதிபதியும் மூன்று மாதத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம், சட்டமன்றம் தான் உயர்ந்ததே தவிர மற்ற நிர்வாக பொறுப்பை ஏற்பவர்கள் உயர்ந்தவர்கள் அல்ல என்கிற திட்டவட்டமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.
ஏற்கனவே இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிற போது ஒன்றிய அரசின் சார்பில் பங்கேற்ற வழக்கறிஞர் என்னென்ன கேள்விகளை எழுப்பினாரோ, அதே கேள்விகளை ஒன்றிய அரசு குடியரசு தலைவர் மூலமாக தற்போது எழுப்புகிறது. இதன் மூலமாக ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இப்போது ஆளக்கூடிய ஒன்றிய அரசாங்கம் ஏற்கவில்லை என்பது தெரிகிறது. குடியரசு தலைவர் பதவியை தவறான முறையில் ஒன்றிய பாஜ அரசு பயன்படுத்துகிறது என்பதற்கு இந்த சம்பவம் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இந்த பிரச்னை குறித்து தமிழக முதல்வர் உச்சநீதிமன்றத்தில் சட்டரீதியாக போராடுவோம் என தெரிவித்துள்ளார். ஒத்தக் கருத்துடைய மாநில முதல்வர்களை இணைத்து சட்டப் போராட்டத்தை நடத்துவோம் என தெரிவித்துள்ளார். இது ஒரு நல்ல அணுகுமுறை. இது தொடர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்கவில்லை; ஜனாதிபதி பதவியை தவறாக ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது: சண்முகம் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.