வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை ெபறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

காஞ்சிபுரம், ஏப்.26: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு ரூ.200, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300 (மாற்றுத்திறனாளிகள் பொறுத்தவரை 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ரூ.600) 12ம் வகுப்பு தேர்ச்சி / பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400 (மாற்றுத்திறனாளிகள் பொறுத்தவரை ரூ.750/) மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600 (மாற்றுத்திறனாளிகள் பொறுத்தவரை ரூ.1000) வீதம் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகைப்பெற காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் மேற்காணும் கல்வித் தகுதிகளை பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். (மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை ஓராண்டு நிறைவு பெற்றிருந்தாலே போதும்) பதிவினை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.

எம்பிசி, பிசிஎம், ஓபிசி, ஓசி பிரிவினர் 40 வயதிற்குட்பட்டவராகவும், எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் 45 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். ஏற்கனவே வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெற்றிருக்கக்கூடாது. தினசரி மாணவராக கல்வி பயின்று வருவோருக்கு உதவித்தொகை பெற தகுதியில்லை. மேற்காணும் அனைத்து தகுதிகளும், விருப்பமும் உள்ள பதிவுதாரர்கள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும். விண்ணப்பத்தினை வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வருகை புரிந்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், www.tnvelaivaaippu.gov.in//empower என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிட்டுள்ளவாறு வருவாய் ஆய்வாளர் அளவில் வழங்கப்பட்ட வருமானச் சான்று, மாற்றுச்சான்றிதழ், கல்விச்சான்று நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் சேமிப்பு கணக்கு புத்தக நகல் இணைத்து காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பெறப்படும் பரிந்துரைகள் ஏதும் பாதிக்கப்படமாட்டாது. மேலும் விபரங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை ெபறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: