மதுராந்தகம், மே 10: மதுராந்தகம் அருகே தனியார் ஆடை தைக்கும் நிறுவன ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு நேற்று திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மதுராந்தகம் அடுத்த மேலவலம்பேட்டை-திருக்கழுக்குன்றம் சாலையில் மேலவலம் கிராமத்தில் தனியார் ஆடை தைக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 3000க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த ஒரு வருடமாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்று நேற்று காலை நிறுவனத்தின் நுழைவாயிலில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன், தொழிலாளர்களிடமும் நிறுவன அதிகாரிகளிடமும் பேச்சு வார்த்தை நடத்தி இரண்டு நாட்கள் கழித்து தங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
The post சம்பள உயர்வு கேட்டு ஆடை நிறுவன ஊழியர்கள் திடீர் போராட்டம்: மதுராந்தகம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.