மே 1 முதல் 4ம் தேதி வரை தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தகவல்

கிளாம்பாக்கம், ஏப்.29: அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மே 1ம் தேதி வியாழக்கிழமை உழைப்பாளர் தினம், 2ம் தேதி வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள், 3ம் தேதி சனிக்கிழமை மற்றும் 4ம் தேதி ஞாயிறுக்கிழமை வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும், இதர இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சிக்கு வரும் 30ம் தேதி புதன்கிழமை 565 பேருந்துகளும், 2ம் தேதி வெள்ளிக்கிழமை மற்றும் 3ம் தேதி சனிக்கிழமை 375 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை புதன்கிழமை 100 பேருந்துகளும், 2ம் தேதி வெள்ளிக்கிழமை மற்றும் 3ம் தேதி சனிகிழமை 90 பேருந்துகளும், மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து வரும் 30ம் தேதி முதல் 3ம் தேதி வரை 24 பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருத்துகள் இயக்கப்படுகிறது. மேலும் 4ம் தேதி ஞாயிறுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 715 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வார இறுதியில் புதன்கிழமை 16,123 பயணிகளும், வியாழக்கிழமை 6,173 பயணிகளும், வெள்ளிக்கிழமை 5,419 பயணிகளும், சனிக்கிழமை 4,547 பயணிகளும் மற்றும் ஞாயிறு 11,54 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும், போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post மே 1 முதல் 4ம் தேதி வரை தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: