நெல்லுக்கு விலை நிர்ணயம் செய்வது போன்று நிலக்கடலைக்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

மாமல்லபுரம், ஏப்.22: நெல்லுக்கு விலை நிர்ணயம் செய்வது போன்று நிலக்கடலைக்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மாமல்லபுரம் சுற்றுவட்டார பகுதியில் தற்போது மார்கழி பட்டம் நிலக்கடலை அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நிலக்கடலை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு, நெல் மட்டுமின்றி கரும்பு, தர்பூசணி, கீரை, கத்தரிக்காய், வெண்டைக்காய், பீர்க்கங்காய், புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடியிலும் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதியில் நிலக்கடலை மார்கழி, சித்திரை என 2 பட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நாட்டுக்கடலை உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

தற்போது, மார்கழி பட்டத்தில் விதைத்த நிலக்கடலைகளை அறுவடை செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதில், திருக்கழுக்குன்றம் தாலுகா, செய்யூர் தாலுகா, மதுராந்தகம் தாலுகாவுக்கு உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த மாதம் மற்றும் இம்மாதம் முதல் வாரத்தில் எதிர்பாராமல் பெய்த மழையால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிலக்கடலை விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆள் பற்றாக்குறை, காரணமாக அறுவடை செய்து இயதிரங்களை பயன்படுத்தி நிலக்கடலையை பிரித்தெடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு ஏக்கர், நிலக்கடலையை இயந்திரம் மூலம் பிரித்தெடுக்க ரூ.3600 முதல் ரூ.4000 வரை செலவாகிறது. நிலக்டலை மூலம், கிடைக்கும் கடலை எண்ணெய், கடலை புண்ணாக்கு உள்ளிட்டவைகளின் விலைகள் அதிகரித்து உள்ள போதிலும், உற்பத்தி செய்கின்ற விவசாயிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. கடந்த, ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விவசாயிகளிடம் இருந்து குறைவான விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் லாபமும் மிக, மிக குறைவாக காணப்படும் நிலை உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு, நெல்லுக்கு விலை நிர்ணயம் செய்வது போன்று, ஆண்டுதோறும் நிலக்கடலைக்கும் விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நெல்லுக்கு விலை நிர்ணயம் செய்வது போன்று நிலக்கடலைக்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: