காஞ்சிபுரத்தில் காய்கறி வியாபாரியை மிரட்டி பணம் பறிப்பு: ரவுடி கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் காய்கறி வியாபாரியை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சரித்திர பதிவேடு குற்றவாளியை, சிவகாஞ்சி போலீசார் கைது செய்தனர். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியை சேர்ந்த ரவுடி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். காஞ்சிபுரம், செட்டிகுளம் பள்ள தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் உதயா (19). இவர் மீது கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், நேற்று காலை காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் மாட்டு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்த பல்லவர்மேடு கிழக்கு பகுதியை சேர்ந்த இளங்கோ என்பவரிடம், மது அருந்த பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் தரமறுத்த இளங்கோவை கைகளால் தாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டிய ரவுடி உதயா, அவரிடமிருந்து 1000 ரூபாயை பறித்துச்சென்றுள்ளார். இதுகுறித்து, இளங்கோ அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சிவகாஞ்சி போலீசார், ரவுடி உதயாவை கைது செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர், மீது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post காஞ்சிபுரத்தில் காய்கறி வியாபாரியை மிரட்டி பணம் பறிப்பு: ரவுடி கைது appeared first on Dinakaran.

Related Stories: