புதுச்சேரி, மார்ச் 14: சுங்கத்துறை அதிகாரி பேசுவதாக கூறி புதுவை சேர்ந்த 2 பேரிடம் ரூ.4.37 லட்சம் ேமாசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி திருபுவனை பகுதியை சேர்ந்தவர் காமாட்சி. இவரை மர்ம நபர் ஒருவர் வாட்ஸ் ஆப்பில் தொடர்புகொண்டு வீட்டிலிருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறியுள்ளார். இதனை நம்பி காமாட்சியும், மர்ம நபருக்கு ரூ.3.02 லட்சத்தை அனுப்பியுள்ளார்.
பின்னர் அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்து, அதில் சம்பாதித்த பணத்தை காமாட்சி எடுக்க முயன்றுள்ளார். ஆனால் அந்த பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது. உழவர்கரை பகுதியை சேர்ந்த அல்பிரட் அன்பரசு என்பவரை மர்ம நபர் ஒருவர் வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்டு சுங்கத்துறை அதிகாரி பேசுவதாகவும், தங்கள் பெயரில் பார்சல் ஒன்று வந்துள்ளது.
அந்த பார்சலை பெற கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பிய அன்பரசு ரூ.1.35 லட்சத்தை அனுப்பி மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார். இருவரும் மோசடி கும்பலிடம் ரூ.4.37 லட்சத்தை இழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சுங்கத்துறை அதிகாரி பேசுவதாக கூறி 2 பேரிடம் ரூ.4.37 லட்சம் நூதன மோசடி appeared first on Dinakaran.