திருவாரூர், மார்ச் 18: திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 21ந் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு திருவாரூர் விளமல் கூட்டுறவு நகரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 21ந் தேதி காலை 9 மணியளவில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் 25க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் 500க்கும் மேற்பட்ட தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். இத்தனியார்துறை முகாமில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து அந்த படிவத்தினை பதிவிறக்கம் செய்து முகாமிற்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
The post வரும் 21ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.