ஆந்திராவில் இருந்து சென்னைக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: 6 பேர் கும்பல் சிக்கியது

புழல்: செங்குன்றம் அருகே, ஆந்திராவில் இருந்து சென்னைக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான 200 கிலோ கஞ்சாவை மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 6 பேர் கும்பலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒடிசா, ஆந்திர மாநிலங்களில் இருந்து சென்னை வழியே தமிழ்நாட்டிற்கு அதிகளவில் கஞ்சா கடத்தப்படுவதாக மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சென்னை மண்டல மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் நேற்று செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி ஒன்றை மடக்கி சோதனை நடத்தினர். அதில், பண்டல் பண்டலாக தடை செய்யப்பட்ட கஞ்சா கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். பின்னர் லாரியில் வந்த 6 பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஒடிசாவில் இருந்து ஆந்திரா வழியே சென்னைக்கு கஞ்சாவை எடுத்து வந்து கோவைக்கு கடத்தி செல்ல முயன்றதும், கைது செய்யப்பட்ட 6 குற்றவாளிகளில் ஒருவரான ரகு என்பவர் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைக்காளி கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் என்பதும் தெரியவந்தது.

இதனயடுத்து அவர்களிடமிருந்து சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான 200 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கைதான 6 குற்றவாளிகளிடம் கஞ்சா கடத்தலில் தொடர்புடைய முக்கிய புள்ளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் வங்கி கணக்குகளை முடக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: