சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட விவகாரத்தில், காரை உடைத்த மூதாட்டி போலீஸ் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சசிக்குமார் இயக்கி நடித்த சுப்ரமணியபுரம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தமிழ் இசை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளவர் ஜேம்ஸ் வசந்தன். சென்னை பாலவாக்கம் பகுதியில் வசித்து வரும் இவர் தவெக தலைவரும், நடிகருமான விஜய்யை விமர்சித்தும் சமூக ஊடகங்களில் பேசி வருவதால் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகிறார்.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கடந்த 26ம் தேதி மதியம் தனது காரில் கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது காரை ஓட்டலை அடுத்துள்ள ஒரு வீட்டின் அருகே சாலையில் நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் சாப்பிட்டு விட்டு மீண்டும் காருக்கு திரும்பி வந்தபோது, காரின் பின் இருக்கைக்கு இடது பக்கவாட்டில் உள்ள கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து தனது முகநூலில் ‘‘தறுதலைகளின் வேலையா? அல்லது தற்குறிகளின் வேலையா? என்று தெரியவில்லை. ஒரு உணவகத்திற்கு சாப்பிட சென்றபோது நடந்தது’’ என பதிவிட்டிருந்தார். மேலும் இந்த கார் கண்ணாடி உடைப்பு சம்பந்தமாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து திருவான்மியூர் காவல் நிலைய போலீசார் இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு வீட்டின் முன்பு ஜேம்ஸ் வசந்தன் காரை நிறுத்தியதால், அந்த வீட்டில் இருந்த ஒரு மூதாட்டி வெளியில் செல்ல முடியாத ஆத்திரத்தில் கல் வீசி கார் கண்ணாடியை உடைத்தது தெரிய வந்துள்ளது. மேலும் இதில் அரசியல் பழிவாங்கல் காரணமாக கார் கண்ணாடி உடைக்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கார் கண்ணாடியை உடைத்த 59 வயது பெண்மணி விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். எந்தவித உள் நோக்கத்தோடும் கார் கண்ணாடியை உடைக்கவில்லை என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதால், விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் வழக்கை நடத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிகிறது.
