கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், தன்னை கொடுமைப்படுத்தியதாக எஸ்பி அலுவலகத்தில் இளம்பெண் பகீர் புகார் அளித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே குந்துமாரனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தேஜாஸ்ரீ(19). இவர், தனது காதலன் தீபக் (21) மற்றும் உறவினர்களுடன் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நான் எங்கள் பகுதியை சேர்ந்த தீபக்கை காதலித்தேன்.
நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், எங்கள் காதலுக்கு என் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 2025 ஏப்ரல் மாதம் வீட்டை விட்டு வெளியேறி, தீபக் வீட்டிற்கு சென்று வசித்து வந்தேன். பெற்றோர் மிரட்டலால், ஓசூர் அலசநத்தம் பகுதியில் உள்ள தீபக் உறவினர் வீட்டுக்கு சென்று வசித்தோம். எனது பெற்றோர் அடியாட்களுடன் வந்து என்னை கடத்திச்சென்றனர். காமன்தொட்டி அடுத்த கோபச்சந்திரம் ஆற்றங்கரையில் வைத்து, எனக்கு மொட்டை அடித்து, கணவன் இறந்தால் செய்யப்படும் இறுதி சடங்குகளை, கட்டாயப்படுத்தி செய்ய வைத்தனர். மேலும், கருச்சிதைவுக்கான மாத்திரைகளை கொடுத்து, அடித்து துன்புறுத்தினர்.
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் பெற்றோர் பிடியிலிருந்து தப்பி மீண்டும் தீபக் வீட்டுக்கு சென்று விட்டேன். இதுகுறித்த புகாரின்பேரில், ஓசூர் டவுன் போலீசார் என் பெற்றோர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தற்போது, தீபக் வீட்டில் பாதுகாப்பாக உள்ளேன். ஆனால், என்னை தீபக் கடத்தியதாக என் பெற்றோர் மீண்டும் புகார் கொடுத்து, எங்களை பிரிக்க நினைக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி, என் பெற்றோர் மற்றும் மிரட்டல் விடுக்கும் அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தேஜாஸ்ரீ தெரிவித்துள்ளார்.
