போதை ஊசி செலுத்திய 2 பேருக்கு தீவிர சிகிச்சை: கஞ்சா வியாபாரி உட்பட 4 பேர் கைது

சென்னை: சூளைமேடு பகுதியில் போதை மாத்திரையை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்திய 2 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கஞ்சா வியாபாரி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை சூளைமேடு சுலைமான் நகரை சேர்ந்தவர் தர்மராஜ்(35). இவர் மேளம் அடிக்கும் பணி செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான கருடன்(30) என்பவருடன் சேர்ந்த கடந்த 24ம் தேதி போதை ஊசி உடலில் செலுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட இருவரையும் அவர்களின் உறவினர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் ஆய்வு செய்த போது, அவர்கள் உடலில் அதிகளவில் போதை மருந்து ஊசி மூலம் ஏற்றியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, மருத்துவமனை தகவலின்படி சூளைமேடு போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தர்மராஜ் மற்றும் கருடனிடம் விசாரணை நடத்தினர். அப்போது, சூளைமேடு நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரியான விக்னேஷ்(20), அவரது நண்பர்கள் ராகேஷ்(21), அஜய்(20), கிஷோர்(21) ஆகியோர் மூலம் போதை மாத்திரைகள் வாங்கி அதை தண்ணீரில் கரைத்து ஊசியில் ஏற்றி உடலில் செலுத்தியது தெரியவந்தது.

போதை மாத்திரை விற்ற விக்னேஷ் உட்பட 4 பேர் சிறிதளவு மட்டும் உடலில் செலுத்தியுள்ளனர். தர்மராஜ் மற்றும் கருடன் ஆகியோர் அதிகளவில் போதை மருந்தை எடுத்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் போதை மாத்திரை விற்பனை செய்ததாக கஞ்சா வியாபாரியான விக்னேஷ் அவரது கூட்டாளிகளான ராகேஷ், அஜய், கிஷோர் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அதிகளவில் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மருத்துவமனையில் உள்ள தர்மராஜ் மற்றும் கருடன் ஆகியோர் அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: