காரில் கடத்தி வந்த புதுச்சேரி மது பாட்டில்கள் பறிமுதல்: ராணிப்பேட்டை வாலிபர் கைது

அண்ணாநகர்: சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வரும் நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து சிலர் சட்ட விரோதமாக மது பாட்டில்களை கடத்தி வருவதாக நேற்று அதிகாலை கோயம்பேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் எதிரில் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தினர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. போலீசார் காரை துரத்தி சென்ற நிலையில், காரில் இருந்தவர்கள் காரை அப்படியே நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் போலீசார் காரை சோதனை செய்தபோது, அதில் புதுச்சேரி மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட காரின் பதிவு எண்ணை வைத்தும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மது பாட்டில்களை கடத்தி வந்தது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியை சேர்ந்த நவீன் (24) மற்றும் அவரது கூட்டாளிகள் என தெரியவந்தது. அதன்பேரில் முதல்கட்டமாக நவீனை போலீசார் அதிரடி செய்தனர். மேலும் அவர்கள் ஓட்டி வந்த காரையும், காரில் இருந்த 24 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட நவீனை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: