ஓசூரில் காதல் திருமணம்; வீடு புகுந்து பெப்பர் ஸ்பிரே அடித்து இளம்பெண் கடத்தல்: தாய், சகோதரர்கள் உள்பட 4 பேர் கைது

ஓசூர்: உத்தரபிரதேச மாநிலம் பைரோஜா பாத் பகுதியை சேர்ந்தவர் நரேசிங். இவரது குடும்பத்தினர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராகவேந்திரா காலனி பகுதியில் தங்கியிருந்து வளையல் வியாபாரம் செய்து வந்தனர். நரேசிங் மகள் கோவிந்தப்பிரியா (21), ஓசூர் அருகே மூக்கண்டப்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது, ஓசூர் வெங்கடேஷ் நகரைச் சேர்ந்த சூர்யா (26) என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில், நரேசிங் மரணமடைந்தார். அதே வேளையில், கோவிந்தப்பிரியாவின் காதலுக்கு உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோயிலில் வைத்து கோவிந்தப்பிரியா -சூர்யா ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இதனால், அதிர்ச்சிக்குள்ளான தாய் சகுந்தலா (55) மற்றும் சகோதரர்கள் கடந்த 13ம் தேதி வீட்டை காலிசெய்துவிட்டு சொந்த ஊர் சென்றனர். அங்கு விவரத்தை கூறியுள்ளனர்.

தொடர்ந்து கோவிந்தபிரியாவை மீட்க திட்டமிட்டனர். இதற்காக கர்நாடகா வந்து, அங்குள்ள கார் டிரைவர் ரத்தோட் என்பவரது துணையுடன் நேற்று பிற்பகல் ஒரு காரில் ஓசூர் வெங்கடேஷ் நகர் சென்றனர். அங்கு, சகுந்தலா மற்றும் அவரது மகன்கள் அதிரடியாக சூர்யா வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கிருந்தவர்கள் மீது பெப்பர் ஸ்பிரே அடித்தனர். இதனால், அனைவரும் கண் எரிச்சலால் துடித்தனர். அந்த சமயத்தை பயன்படுத்தி கோவிந்தப்பிரியாவை வலுக்கட்டாயமாக தூக்கி காரில் போட்டு கொண்டு கடத்தி சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீசார், டவர் லொகேஷன் உதவியுடன் கர்நாடக மாநிலம் தொட்ட ஆல்த்மரா ரோடு, ராமோஅள்ளி பகுதியில் சகுந்தலா, சகோதரர்கள் பிண்டுகுமார் நாயக் (24), ஆகாஷ்( 19) மற்றும் கார் டிரைவர் ரத்தோட்(27) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கோவிந்தப்பிரியாவை மீட்டனர்.

Related Stories: