திருவனந்தபுரம் : கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் பகுதியைச் சேர்ந்தவர் மேரிக்குட்டி (70). இவரது மகன்கள் ரெஜி (54), சஜி (43). இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. கடந்த 1 மாதத்திற்கு மேலாக மேரிக்குட்டியையும், ரெஜியையும் காணாததால் பக்கத்து வீட்டினர் இது தொடர்பாக சஜியிடம் விசாரித்தனர். ஆனால், அதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார்.
இதனால் சந்தேகமடைந்த அப்பகுதியினர் பக்கத்து ஊரில் வசிக்கும் மேரிக்குட்டியின் மகள் சினிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் நெடுங்கண்டம் போலீசில் தாய், அண்ணன் காணாமல் போனது குறித்து புகார் செய்தார். சஜி தலைமறைவானார்.
இந்த நிலையில் வீட்டுக்கு பின்புறம் புதைக்கப்பட்ட நிலையில் 2 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. புதைக்கப்பட்டு 1 மாதத்திற்கு மேல் ஆகிவிட்டதால் உடல்கள் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டன. அந்த உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சஜி நேற்று அருகிலுள்ள மலைப்பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அவரை போலீசாரை் கைது செய்தனர். விசாரணையில் தாய், அண்ணன் இருவரையும் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
