பெரம்பூர்: பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் 52 வயது பெண்ணின் கணவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 16 மற்றும் 15 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். கணவர் இறந்த பின்பு பெண் நரேந்திர பாபு(60) என்ற நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு ஒன்றாக பழகி வந்துள்ளனர். அவ்வபோது நரேந்திர பாபு பெண்ணின் மகள்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமிகள் தனது தாயிடம் கூறியும் தாய் பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் சிறுமிகள் இருவரும் தனது அத்தைக்கு போன் செய்து நடந்தவற்றை கூறியுள்ளனர். அவர் குழந்தைகள் நல ஆர்வலர் உதவியுடன் செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பெரம்பூர் ராஜா தெரு பகுதியைச் சேர்ந்த நரேந்திர பாபு தான் பழகி வந்த பெண்ணின் இரண்டு மகள்களுக்கும் பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது. இதனையடுத்து நரேந்திர பாபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
