நெல்லிக்குப்பம் அருகே 2 வயது பெண் குழந்தையை கடத்திய தவெக பிரமுகர் கைது: தங்க தாயத்து, பைக் பறிமுதல்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே 2 வயது பெண் குழந்தையை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து, தங்க தாயத்து, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே பத்திரக்கோட்டை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவரது மனைவி சரண்யா. இவர்களது 2 வயது பெண் குழந்தை, நேற்று வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தது. அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த மர்மநபர், குழந்தையை கடத்தி சென்றார். வீட்டின் வெளியே பெற்றோர் வந்து பார்த்தபோது, குழந்தையை காணவில்லை. அதிர்ச்சியடைந்து அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, பைக்கில் வந்த நபர் கடத்தி சென்றது தெரிந்தது.

இதுகுறித்து பிரவீன்குமார் நடுவீரப்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து எஸ்பி ஜெயக்குமார், உத்தரவின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார், அதிவிரைவு படை வீரர்கள் நடுவீரப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் குள்ளஞ்சாவடி அருகே புலியூர் கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன் மகன் அன்பு (22) என்பவரின் நிலத்தின் அருகே குழந்தை அழும் சத்தம் கேட்கவே, அங்கு சென்ற அவர், அனாதையாக நின்றிருந்த குழந்தையை மீட்டு குள்ளஞ்சாவடி போலீசில் ஒப்படைத்தார்.

போலீசார் விசாரித்தபோது, அது கடத்தப்பட்ட பிரவீன்குமாரின் குழந்தை என்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்குபின் அக்குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை பத்திரமாக ஒப்படைத்த அன்புவை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார். சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்த போலீசார், கடத்தலுக்கு மர்ம நபர் பயன்படுத்திய பைக், வாகன எண்ணை அடையாளம் கண்டனர். தொடர்ந்து குள்ளஞ்சாவடி புலியூர் மேலத் தெருவை சேர்ந்த வெற்றிவேலை (27) சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.

செலவுக்கு பணமில்லாததால், குழந்தையின் கழுத்தில் இருந்த ஒரு கிராம் தங்க தாயத்துக்காக கடத்தி சென்றதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து குழந்தை கடத்தல் பிரிவின்கீழ் வெற்றிவேல் மீது வழக்குபதிந்து கைது செய்தனர். இவர், தவெக பிரமுகர் என தெரிய வந்துள்ளது. அவரிடமிருந்த நகை, பைக் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: