வேப்பனஹள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே கத்திரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சூரியநாராயணன். வாஸ்து ஜோதிட நிபுணர். இவரது மகன் ஹரிஹரன் (14). தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் அதே கிராமத்தை சேர்ந்த நாகராஜ் மகன் பகவதியும் (18) நண்பர்கள். பொறியியல் கல்லூரி மாணவரான பகவதி, அவரது நண்பர்கள் எலக்ட்ரீசியன்கள் அஜீத் (18), மோனிஷ் (19) ஆகிய மூவரும், கடந்த 12ம் தேதி ஹரிஹரனை சூளகிரி அருகே காட்டு பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளனர். அங்கிருந்து ஹரிஹரனின் தந்தைக்கு போன் செய்து, உங்கள் மகனை கடத்தி வைத்துள்ளோம், அவனை விடுவிக்க ரூ.5 லட்சம் தர வேண்டும் என மிரட்டியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சூரியநாராயணன், வேப்பனஹள்ளி போலீசில் புகார் அளித்தார். போலீசார், மிரட்டல் வந்த செல்போனில் தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுத்தனர். இதனால் பயந்துபோன மூவரும், ஹரிஹரனை அங்கேயே விட்டு விட்டு தலைமறைவாகினர். இதையடுத்து போலீசார் ஹரிஹரனை மீட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து, ஹரிஹரனை கடத்திய பகவதி, அஜித், மோனிஷ் ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
* ஒரு கிராம் தங்க தாயத்துக்காக 2 வயது பெண் குழந்தை கடத்தல்
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே நடுவீரப்பட்டு பத்திரக்கோட்டை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார். இவரது மனைவி சரண்யா. இவர்களது 2 வயது பெண் குழந்தை நேற்று காலை 9.30 மணியளவில் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தது. அவ்வழியாக பைக்கில் வந்த மர்ம நபர் குழந்தையை கடத்தி சென்றார். இதுகுறித்து பிரவீன்குமார் நடுவீரப்பட்டு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, போலீசார் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் குள்ளஞ்சாவடி அருகே புலியூர் கிராமத்தை சேர்ந்த அன்பு (22) தனது நிலனத்தின் அருகே அழுது கொண்டிருந்த குழந்தையை மீட்டு குள்ளஞ்சாவடி போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், புலியூர் மேல தெருவை சேர்ந்த வெற்றிவேல் (27) என்பவர், குழந்தை கழுத்தில் இருந்த ஒரு கிராம் தங்க தாயத்தை கழற்றி கொண்டு நிலத்தில் தனியாக விட்டு சென்றது தெரிந்தது. இதையடுத்து குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்த, போலீசார் வெற்றிவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
