பாகூர்: மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட இன்ஜினியரை கடப்பாரை கம்பியால் குத்தி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி மாநிலம் பாகூர் அருகே கிருமாம்பாக்கம் அடுத்த மணப்பட்டு மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(35). கெமிக்கல் இன்ஜினியர். திருமணம் ஆகாதவர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பணிச்சூழல் காரணமாக அவ்வப்போது மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவர் வீட்டில் இருந்துள்ளார். பின்னர் புதுச்சேரி வடமங்கலம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் அவரால் வேலை செய்ய முடியாத நிலை ஏற்படவே, கடந்த 2 வாரமாக மருத்துவ சிகிச்சையில் இருந்ததாக கூறப்படுகிறது.
மணிகண்டன் வசித்து வந்த அதே தெருவில் வசிப்பவர் வசந்தராஜா(47). டைல்ஸ் போடும் தொழிலாளி. பாகூர் மற்றும் கடலூர் ஒட்டியுள்ள பகுதிகளில் வேலைக்கு சென்று வந்துள்ளார். இவரது மனைவி ராஜம்(40). ஒரே தெரு என்பதால், இவரது வீட்டுக்கு அவ்வப்போது மணிகண்டன் வந்து பேசிவிட்டு உணவு சாப்பிட்டு சென்றதாக கூறப்படுகிறது. நாளடைவில் மணிகண்டனுக்கும், ராஜத்திற்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த வசந்தராஜா, மனைவியை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த 2 மாதமாக வசந்த ராஜா, மனைவியை பிரிந்து அதே பகுதியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மணிகண்டனின் பைக்கை எடுத்து வசந்தராஜா அடமானம் வைத்து வீண் செலவு செய்து விட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் பிரச்னை ஏற்பட்ட நிலையில், கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் மணிகண்டன் தரப்பில் ஒரு வாரத்துக்கு முன் புகார் அளித்தனர். நேற்று முன்தினம் மணிகண்டன் வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்று அங்குள்ள கட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். மனைவியுடன் கள்ளக்காதலால் ஆத்திரத்தில் இருந்த வசந்தராஜா, நேற்று அதிகாலை 5 மணியளவில், கூர்மையான கடப்பாரையை எடுத்து வந்து, தூங்கிக் கொண்டிருந்த மணிகண்டன் கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த மணிகண்டனை, உறவினர்கள் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குபதிந்து வசந்தராஜாவை கைது செய்தனர்.
* படிக்காமல் ஊர் சுற்றியதை கண்டித்ததால் தலையில் பாட்டிலால் அடித்து தந்தையை கொன்ற சிறுவன்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காமராஜர் சாலையை சேர்ந்தவர் கரிகாலன்(48). இவருக்கு 17 வயதில் மகன், 14 வயதில் மகள் உள்ளனர். மகன் 10ம் வகுப்பு முடித்ததும் கொற்கையில் உள்ள பாலிடெக்னிக்கில் சேர்ந்தார். ஆனால் பாலிடெக்னிக் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். இதையடுத்து 12ம் வகுப்பு நேரடியாக படிப்பதற்காக தனியார் இன்ஸ்டிட்யூட்டில் தந்தை கரிகாலன் சேர்த்து விட்டார். அங்கும் சரிவர செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் இருந்த மகனிடம், ஏன் படிக்க செல்வதில்லை, பொறுப்பு இல்லாமல் ஊர் சுற்றினால் நல்லா இருக்குமா என்று கரிகாலன் கண்டித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகன், வீட்டில் கிடந்த சோடா பாட்டிலை எடுத்து தந்தை கரிகாலன் தலையின் பின்பகுதியில் தாக்கினார். இதில் தலையில் ரத்த வெள்ளத்தில் கரிகாலன் சுருண்டு விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர், கரிகாலனை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை கரிகாலன் உயிரிழந்தார். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிந்து தந்தையை கொலை செய்து விட்டு தப்பிய மகனை தேடி வருகின்றனர்.
