கமலின் வார்த்தையால் நெகிழ்ந்த நானி

தெலுங்கு நடிகர் நானி வரிசையாக ‘ஹாய் நானா’, ‘தசரா’, ‘ஹிட் தி தர்ட் கேஸ்’ உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்தார். அடுத்தகாக ‘தி பாரடைஸ்’ என்ற படத்தில் வித்தியாசமான ரோலில் நடித்து வருகிறார். கமல்ஹாசனின் தீவிர ரசிகரான நானி அவரின் படங்கள் அனைத்தையும் விரும்பி பார்ப்பவர். அந்தவகையில் பேட்டி ஒன்றில் ‘விருமாண்டி’ படம் குறித்து பேசிய நானி, ‘‘அந்த படத்தில் வரும் கோர்ட் காட்சியில் கமல்ஹாசன் தூங்கிக் கொண்டு இருப்பார், தூக்கத்தில் இருந்து அவர் எழும்போது, தனது மீசையை சரி செய்து கொண்டு, வறண்டு போன வாயை எச்சிலில் சரி செய்வார்.

அந்த காட்சியில் கமல்ஹாசன் நடிப்பதே தெரியாது. அவ்வளவு ரியலாக இருக்கும்’’ என்றார். இந்த வீடியோ வைரலானது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் நானியை குறிப்பிட்டு பேசியுள்ளார். இது தொடர்பாக தொகுப்பாளர் நானியின் பெயரைக் குறிப்பிடாமல் கேள்வி எழுப்பியதும், உடனே கமல்ஹாசன் நானி என்று பெயரைக் குறிப்பிட்டு, ‘‘நானியின் பெயரை நான் சொன்னதற்கு காரணம் நன்றிகள் நானி என்று சொல்வதை விட பெரியது, நானி என்று அவரது பெயரைச் சொன்னாலே போதும். நான் மனதில் என்ன நினைக்கிறேன் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள்’’ என்று கமல் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த நானி தனது எக்ஸ் தளத்தில் கமல்ஹாசனை டேக் செய்து ‘‘போதும் சார், போதும்’’ என பதிவிட்டு சிவப்பு ஹார்ட் எமோஜியை சேர்த்து பதிவிட்டுள்ளார்.

Related Stories: