அதிக பொருட்செலவில் மிகப் பிரமாண்டமான முறையில் உருவாகும் இப்படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இப்படம் அதிநவீன ெதாழில்நுட்பங்களுடன் உருவாக்கப்படுகிறது. அல்லு அர்ஜூனுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 8ம் தேதியன்று 43வது பிறந்தநாள். இதையொட்டி இப்படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. சன் பிக்சர்ஸின் அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட வீடியோவில் கலாநிதி மாறன், அல்லு அர்ஜூன், அட்லீ ஆகியோர் சந்திக்கும் காட்சிகள் இடம்பெற்றன.
உலக அளவிலான தரத்தில் பான்வேர்ல்ட் படைப்பாக உருவாகும் இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் அடுத்தடுத்து அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். அந்த வகையில், நேற்று காலை 11 மணியளவில் சன் பிக்சர்ஸின் அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட வீடியோவில், அல்லு அர்ஜூனுடன் இணைந்து தீபிகா படுகோன் நடிப்பது அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உலகம் முழுவதும் அல்லு அர்ஜூன் மற்றும் தீபிகா படுகோனின் ரசிகர்கள் இத்தகவலை சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிர்ந்து, தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.