ஹேமா கமிட்டி வழக்கு என்னானது..? கேரளா முதல்வருக்கு பார்வதி கேள்வி

சென்னை: மலையாள நடிகை ஒருவர், கடந்த 2017ல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதைத் தொடர்ந்து, மலையாள சினிமா துறையில் பணிபுரியும் பெண்களுக்காக ‘வுமன் இன் சினிமா கலெக்டிவ்’ (WCC) என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தொடர் கோரிக்கையால் மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. ஹேமா கமிட்டி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது குறித்து நடிகை பார்வதி திருவோத்து கேரள அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கேரள முதல்வர் பினராயி விஜயனை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார் பார்வதி. அதில், ‘‘ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டதற்கான உண்மையான காரணத்தில் நாம் கவனம் செலுத்தலாமா? சினிமா துறையில் ஒழுங்குமுறைகளை உருவாக்க உதவும் கொள்கைகளை எப்போது அமல்படுத்துவது? அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஐந்தரை ஆண்டுகள் மட்டுமே ஆகிறது, அவசரம் ஒன்றும் இல்லை, பொறுமையாக செய்யலாம்’’ என்று பார்வதி நக்கல் கலந்து காட்டமாக தெரிவித்துள்ளார். ஹேமா கமிட்டி தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு அந்த வழக்கை முடிக்கத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து பார்வதி இதனை பதிவிட்டுள்ளார்.

Related Stories: