தனது தாய்மொழியைப் புகழ்ந்து பேசும் முயற்சியில், கமல்ஹாசன் கன்னட மொழியை அவமதித்துவிட்டதாக கர்நாடக பாஜ தலைவர் பி.ஒய். விஜயேந்திரா குற்றம் சாட்டியுள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில், ‘‘கலைஞர்கள் அனைத்து மொழிகளையும் மதிக்க வேண்டும் என்றும், கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் நடித்த கமல்ஹாசன் கன்னடத்தை அவமதித்தது சரியல்ல’’ என்றும் விஜயேந்திரா கூறினார். கமல்ஹாசன் உடனடியாக கன்னட மக்களிடம் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எந்த மொழி எந்த மொழிக்கு தோனியாக இருந்தது என்று கூற கமல்ஹாசன் ஒரு வரலாற்று ஆசிரியர் அல்ல என்றும் அவர் தெரிவித்தார். மேலும் சில கன்னட அமைப்புகளும் கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறும்போது, ‘‘கன்னடம், நீண்ட புராதான வரலாறு கொண்ட மொழி. இதை கமல்ஹாசன் அறிந்திருக்க வாய்ப்பில்லை’’ என்றார்.பெங்களூரில் ‘தக் லைஃப்’ பட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு, பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. படத்துக்கு கர்நாடகத்தில் தடை விதிப்போம் என கன்னட அமைப்புகள் தெரிவித்துள்ளன.இதற்கிடையே, பெங்களூரு ஆர்.டி.நகர் காவல் நிலையத்தில் கமல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமன்னா விவகாரம்:
கர்நாடக அரசின் கே.எஸ்.டி.எல் நிறுவனத்தின் மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்ட விவகாரம் குறித்து கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, தமன்னாவை நியமித்தது குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார். மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக தமன்னாவை நியமித்ததில், மாநிலத்தின் நலன்தானா அல்லது அரசியல்வாதிகளின் நலன்தானா என்பது தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார். தமன்னாவுக்கு ரூ.6.5 கோடி வழங்கியுள்ளனர். இது சரியல்ல என்று அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தமன்னாவை நியமித்ததற்கு பதிலாக கன்னட நடிகைகள் இலவசமாகவே பிராண்ட் அம்பாசிடராக இருந்திருப்பார்கள் என்றும் தமன்னாவுக்குக் கோடிக்கணக்கில் சம்பளம் கொடுப்பது சரியல்ல எனவும் கூறியுள்ளார். கர்நாடக அமைப்புகளும் கன்னட நடிகைக்கே இந்த வாய்ப்பை தரவேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளன.