இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை பொறுத்தே நடிகைகளுக்கு வாய்ப்பு: சொல்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி

சென்னை: மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமி, தமிழுக்கு வந்த பிறகு தெலுங்குக்கு சென்றார். அங்கும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சூரி ஜோடியாக நடித்துள்ள ‘மாமன்’ படம், அவரது நடிப்புக்கு அதிகமான பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் குவித்து வருகிறது. அடுத்து அவரது நடிப்பில் மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ படம் வெளியாகிறது. சமீபத்தில் ஐஸ்வர்யா லட்சுமி அளித்துள்ள பேட்டி வருமாறு:
நான் டாக்டருக்கு படித்து முடித்துவிட்டு சினிமாவில் நடிக்க வந்தேன்.

ஆனால், கடந்த 5 வருடங்களாக நான் மருத்துவ பயிற்சிகளை மேற்கொள்ளாத நிலையில், யாரும் என்னை ‘டாக்டர்’ என்று சொல்ல வேண்டாம். சினிமாவில் நடிப்பதன் மூலமாக நிறைய பணம் சம்பாதிக்க முடியும், அதிக புகழ் கிடைக்கும் என்று பலர் நினைக்கின்றனர். அது தவறு. பணம் என்பது ஒருவருடைய தேவையை பொறுத்த விஷயம். ஆனால், எனக்கு அடுத்தடுத்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால், ஏற்கனவே எனக்கு கிடைத்த புகழை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது.

எவ்வளவு பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர் என்பதை பொறுத்தே நடிகை களுக்கு புதுப்பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. எனவே, நல்ல மார்க்கெட்டிங் செய்வது மற்றும் அடிக்கடி வித்தியாசமான உடைகளில் தோன்றி போட்டோ ஷூட் நடத்தி வெளியிடுவது, வீடியோ பதிவிடுவது போன்றவற்றை செய்தாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் தினந்தோறும் பயிற்சி செய்வது போலத்தான் நடிகர், நடிகைகளும் தினந்தோறும் பணியாற்ற வேண்டும். சோம்பேறியாக மாறிவிட்டால் அவ்வளவுதான், சினிமாவில் காணாமலே போய்விடுகின்ற அபாயம் இருக்கிறது.

Related Stories: