இலங்கையில் பொருளாதார சிக்கலை சமாளிக்க முடியாமல் தவிக்கும் சசிகுமார், அவரது மனைவி சிம்ரன், மகன்கள் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர், அங்கிருந்து தப்பித்து கடல் வழியாக ராமேஸ்வரம் வருகின்றனர். அங்கு போலீஸ் ரமேஷ் திலக்கிடம் மாட்டிக்கொள்ளும் அவர்கள், பிறகு சமயோசிதமாக பேசி சென்னைக்கு வருகின்றனர். சிம்ரனின் அண்ணன் யோகி பாபுவின் உதவியால், போலீஸ் இன்ஸ்பெக்டர் பக்ஸ் பகவதி பெருமாள் வீட்டில், கேரளா குடும்பம் என்று பொய் சொல்லி வாடகைக்கு குடியேறுகின்றனர்.
பிறகு எம்.எஸ்.பாஸ்கரிடம் கார் டிரைவராக வேலைக்கு சேரும் சசிகுமார், நாளடைவில் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு மிகவும் பிடித்த மனிதராக மாறுகிறார். அப்போது ராமேஸ்வரத்தில் பயங்கர வெடிகுண்டு விபத்து ஏற்படுகிறது. அதை அகதிகளாக வந்த சசிகுமாரின் குடும்பம் செய்ததாக போலீஸ் உயரதிகாரி சந்தேகப்பட்டு, சசிகுமார் குடும்பத்தை தேடுகிறார். இறுதியில் சசிகுமார் குடும்பத்தை ரமேஷ் திலக் காட்டிக்கொடுத்தாரா என்பது மீதி கதை.
மனிதநேயமே முக்கியம் என்பதை அழுத்தமாக சொன்ன புது இயக்குனர் அபிஷன் ஜீவிந்துக்கு பாராட்டு. ‘அயோத்தி’ படத்துக்கு பிறகு சசிகுமார் அற்புதமாக நடித்துள்ளார். மனைவி மற்றும் மகன்களிடம் காட்டும் கூடுதல் பாசம் யதார்த்தம். சிம்ரனுடன் நெருக்கமான காட்சிகளும் இருக்கிறது. யோகி பாபுவும், ரமேஷ் திலக்கும் குணச்சித்திர நடிப்பில் போட்டி போட்டு அசத்தியுள்ளனர். சசிகுமாரின் 2வது மகன் மாஸ்டர் கமலேஷ், இயல்பான காமெடியில் கலக்கியிருக்கிறார்.
இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி தம்பதியின் வாழ்க்கை ஒரு ஹைக்கூ. மிதுன் ஜெய்சங்கர், யோகலட்சுமி, பக்ஸ் பகவதி பெருமாள் ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஃபீல்குட் மூவியான இதன் கிளைமாக்ஸ் மனதில் ஆழமாக பதிகிறது. கதையை மேன்மைப்படுத்தும் விதமாக ஷான் ரோல்டனின் பாடல்களும், பின்னணி இசையும் அமைந்துள்ளது.
இலங்கை தமிழர்களின் கதை சோகமாக இருக்கும் என்பதை மாற்றி, கலகலப்பாக கொண்டு சென்றுள்ளனர். அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவும், பரத் விக்ரமனின் எடிட்டிங்கும் கூடுதல் பலம். சசிகுமார் ஒரு இலங்கை தமிழர் என்பதை போலீசார் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதையும், போலி ஆவணங்களை சட்டென்று கொண்டு வருவதையும் ஏற்க முடியவில்லை.