தெலுங்கு ‘அர்ஜூன் ரெட்டி’, இந்தி ‘அனிமல்’ ஆகிய படங்களின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, அடுத்ததாக இயக்கும் ‘ஸ்பிரிட்’ என்ற படத்துக்கு தேதிகள் கேட்டு, இந்திய திரையுலகின் முன்னணி நடிகை தீபிகா படுகோனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்ட தீபிகா படுகோன், திடீரென்று கர்ப்பமானார். இதனால் படப்பிடிப்பு தாமதமானது. மகள் பிறந்த சில மாதங்களிலேயே படப்பிடிப்பில் பங்கேற்க தீபிகா படுகோன் முயற்சித்தபோது வேறு சில பிரச்னைகள் ஏற்பட்டன.
இப்படத்தில் நடிக்க 20 கோடி ரூபாய் சம்பளம் கேட்டு மிரள வைத்த அவர், ரிலீசுக்கு பிறகு கிடைக்கும் லாபத்தில் தனக்கு ஒரு பங்கு வேண்டும் என்றும், தினமும் 8 மணி நேரம் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்பேன் என்றும், படப்பிடிப்பு 100 நாட்களுக்கு மேல் தாண்டினால் கூடுதல் சம்பளம் வேண்டும்; அதுவும் ஒவ்வொரு நாளுக்கும் வெவ்வேறு சம்பளம் வேண்டும் என்பது உள்பட பல நிபந்தனைகளை விதித்தார். இதை இயக்குனரிடம் நேரில் சொல்லாமல், தனது ஏஜெண்ட் மூலம் சொல்லி அனுப்பினார். இதனால் கடும் கோபமடைந்த சந்தீப் ரெட்டி வங்கா, தீபிகா படுகோனுக்கு பதிலாக ‘அனிமல்’ மூலம் பிரபலமான திரிப்தி டிம்ரியை பிரபாஸ் ஜோடியாக ஒப்பந்தம் செய்துவிட்டார்.
இதுவரை கோடிகளில் சம்பளம் வாங்காத திரிப்தி டிம்ரிக்கு 6 கோடி ரூபாய் சம்பளத்தை வழங்கிய சந்தீப் ரெட்டி வங்காவுக்கு தீபிகா படுகோனின் செயல் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி ஒரு பதிவை வெளியிட்டார். இதற்கு தீபிகா படுகோனும் பதிலடி கொடுத்தார். இப்பிரச்னை படம் முடியும் வரை நீடிக்கும் என்று புரிந்துகொண்ட திரிப்தி டிம்ரி, இதுவரை எந்தவொரு விளக்கமும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.