தமிழில் ‘கண் சிமிட்டும் நேரம்’ படம் மூலம் அறிமுகமானவர் சரத்குமார். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி அரசியல் கட்சி தொடங்கி தேர்தலிலும் போட்டியிட்டு வருகிறார். 70 வயதாகும் சரத்குமார் தன் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் உடையவர். அதற்காக மூன்றுவேளையும் சத்தான உணவுகளை டயட் முறையில் சாப்பிட்டு வருகிறார். தற்போது பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகவுள்ள ‘கண்ணப்பா’ என்ற படத்திலும், தமிழில் ‘3பிஎச்கே’ என்ற படத்திலும் நடித்துள்ளார். முன்னதாக ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
இந்நிலையில், விமல், சாயா தேவி, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சரத்குமார் குறித்து பேசியது வைரலாகி வருகிறது. சீமான் பேசும்போது, ‘‘சரத்குமாரை நான் அண்ணன் என்று தான் உரிமையோடு அழைப்பேன்.
நாங்கள் ரொம்பவே நெருக்கமானவர்கள். ‘பொன்னியின் செல்வன்’ பட சமயத்தில் விமானநிலையத்தில் அவரை சந்தித்தப்போது நான் அவரிடம், உனக்கு இந்த வயசுல ஐஸ்வர்யா ராய் ஜோடி கேக்குதா என்று கிண்டலாக கேட்டேன். அதற்கு அவர், உனக்கு பொறாமைடா என்று கூறினார். உடல் ஆரோக்கியத்தை நல்லபடியாக வைத்துக்கொண்டால் எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதற்கு சரத்குமார் ஒரு உதாரணம்’’ என்று பேசினார்.