மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை ஒரே வாரத்தில் அடுத்தடுத்து சோகம்

பள்ளிகொண்டா, மே 14: பள்ளிகொண்டா அருகே மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா கேம்ரான்பேட்டையை சேர்ந்தவர் ஜெயவேந்தன் மகன் ரோகித்(28). இவரது மனைவி ஒதியத்தூர் புதுமனையை சேர்ந்த ஜெயந்தி மகள் பேபி ஷாமினி(23). இருவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில், கடந்த 6ம் தேதி பேபி ஷாமினி ஒதியத்தூரில் உள்ள தனது தாய் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த ரோகித் வீட்டில் உள்ள யாரிடமும் சரிவர பேசாமல் இருந்து வந்துள்ளார். கடந்த 8ம் தேதி அவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தொடர்ந்து வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை ரோகித் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு கொண்டு மீண்டும் தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ரோகித் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் ரோகித் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்த ஒரே வாரத்தில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை ஒரே வாரத்தில் அடுத்தடுத்து சோகம் appeared first on Dinakaran.

Related Stories: